Friday, August 7, 2009

நிறங்கள் கசியும் பூக்கள்

நொடிப்பொழுதேனும் இமைக்காமல்
பார்க்குமாறு செய்துவிடுகிறது
நிறங்கள் கசியும் பூக்கள்
அருகில் சென்று வாசம் நுகர்வதை
அவை ஆட்சேபிப்பதில்லை

தொட்டுத்தடவி மென்மை ரசிப்பதை
கொஞ்சமேனும் மறுப்பதில்லை

பறிக்கப்படுகிற தருணங்களில் அதன்
பலவீனம் மட்டுமே புலப்படுகிறது

வலுவற்ற வஸ்துக்களை அணுகுவது
எளிதானதாக இருக்கிறது

சூரியன்
எப்பொழுதும் எங்கிருந்தோ
பிரகாசித்துக்கொண்டு இருக்கிறது ...

- லக்‌ஷ்மி சாகம்பரி

http://sahambari.blogspot.com/

Tuesday, August 4, 2009

அந்நிய நாட்டில் அகதியா

சொர்கமே என்றாலும் நம்மூரை
போல வருமா ...அதற்காய்
அயலகத்தில் வாழும் வரை
நரகத்தில் வாழ்வதாகுமா

உண்ணாத குழந்தைக்காய்
மனைவியை திட்டுவாய்
உணவு பிடிக்கவில்லையென
தொலைபேசியில் புலம்புவாய்

தமிழை பேசுபவன் தமிழன்
ஆங்கிலம் பேசுபவன் ஆங்கிலேயன்
இரண்டும் பேசுபவனை என்ன சொல்வாய்
பேசாத ஊமையை எங்கு சேர்ப்பாய்

சொத்து தகராறில் தம்பி
வெட்டி கொலைக்கும்
எல்லைத் தகராறில் வீரர்
சுட்டுக் கொலைக்கும்
வித்தியாசம் நிலத்தின் சுற்றளவே
வித்தியாசம் மனத்தின் சுற்றளவே

ஈழத்தில் உன்னினம் எரியும்
பொழுது கொதிக்கும் நெஞ்சுதனை
ஒத்ததே ஒரிசாவில் கிறிஸ்துவனை
எரிக்க கண்ட உலகவ்வினம்

நாடென்பது நிர்வாகத்திற்காய்
பிரித்ததாகும்
மனிதப் பற்று ஒன்றே மானிடர்க்கு
உரித்தாகும்

சுவாசிக்க காற்றளிக்கும்
கண்டமெல்லாம் என் கண்டமே
நதியின் கரைத்தாலும் உலகக்கடலில்
கலக்கு மென் பிண்டமே

- செல்வேந்திரன்

http://www.enpadaipugal.blogspot.com/

Sunday, May 10, 2009

எங்கே எங்கள் தலைவன்!!!

அரசியல்னா சாக்கடை அதை சுத்தம் செய்ய முடியாது. இதுதான் பெரும்பாலானவர்கள் சொல்லும் கருத்து.


நமக்கு எல்லாம் காமராசர் மாதிரி தலைவர் வேணும் . எப்படி ? அம்மாவுக்கு மின்விசிறி, போர்வை வேணும்னா , ரெண்டும் எதுக்கு ஒரே நேரத்துல? ஒண்ணுதான் வாங்கி தர முடியும்னு சொல்ற மாதிரி ஒரு தலைவர். தன்னலமே இல்லாம உழைக்கும் ஒரு தலைவர்.

ஆனா நம்ம எப்படி இருப்போம். ஒருத்தன விட காசு இன்னோருத்தவன் கொடுத்தா அங்க வேலைக்கு போவோம். ஒரு ஃப்ளாட் , கார், 29 இன்ச் கலர் டீவி , வித விதமா செல் போன் இதெல்லாம் நமக்கு வேணும். அது மட்டும் இல்லாம வீக் எண்ட்ல வீட்ல ஒரு நாள் நல்ல தூக்கம், ஒரு நாள் ஷாப்பிங்னு இருக்கனும். சுயநலத்தின் மொத்த உருவமா நாம இருப்போம். ஆனா நமக்காக உழைக்க ஒரு தியாகி நமக்கு வேணும். என்னங்கடா விளையாடறீங்களா?

படிக்காதவனுக்கு இலவச பொருட்களை கொடுத்து அரசியல் கட்சிகள் ஏமாத்துதுனு வாய் கிழிய பேசுவோம் . பழியெல்லாம் எழுத படிக்க தெரியாதவன் பேர்ல போட்டுடுவோம். தமிழ் நாட்டோட Literacy rate 73%. அப்ப எழுத படிக்க தெரிஞ்சவனெல்லாம் ஒழுங்கா ஓட்டு போட்டாலே நிச்சயம் நிலைமை மாறும்.

ஆனா எலக்ஷனப்ப ஓட்டு போட சொல்லி லீவ் கொடுத்தா வீட்ல உக்கார்ந்து ஜாலியா டீவி பார்ப்போம் இல்லைனா சொந்த வேலைகளை பார்ப்போம் . கேட்டா , வாக்காளர் அடையாள அட்டை இல்லை , ரொம்ப நேரம் லைன்ல நிக்கனும்னு நொண்டி சாக்கு சொல்லுவோம். லைசன்ஸ் எடுக்க எடுக்கற முயற்சியிலயோ இல்லை பாஸ்போர்ட் வாங்க எடுக்கற முயற்சியிலையோ பாதிக்கூட முயற்சி செய்ய மாட்டோம். திருப்பதில ஒரு நாள்கூட க்யூல நிப்போம். அதே எலக்ஷன்ல ஓட்டு போட நிக்க மாட்டோம்.. கேட்டா நான் ஒருத்தவன் போடற ஓட்டால பெருசா என்னத்த ஆகிட போகுதுனு ஒரு சப்ப காரணம் சொல்லுவோம் .

வீட்ல உக்கார்ந்து நொண்டி நியாயம் பேசிட்டு அரசியல்வாதி நல்லவனா இருக்கனும், படிக்காத மக்களுக்கு விழிப்புணர்ச்சி வரணும் இப்படி கண்டத பேசுவோம். ஆனா அதே நேரம் தெருவுல நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்கற குப்பையை கூட கொண்டு போய் ஒரு குப்பை தொட்டில போட மாட்டோம்.

வாங்கற எந்த பொருளுக்கும் பில் போட்டு வாங்க மாட்டோம். பில் போட்டா ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் அதிகமாகும்னு கடைக்காரன் சொன்னா சரி வேண்டாம்னு சொல்லிடுவோம். இல்லைனா பில் போட 5 நிமிஷமாகும்னு சொன்னா வேணாம்னு சொல்லிடுவோம். நம்ம பண்ற சின்ன சின்ன தப்பெல்லாம் நமக்கு தப்பாவே தெரியாது. அதை பத்தி நாம ஒரு நிமிஷம் கூட கவலைப்பட மாட்டோம் .

எத்தனை பேர் நியாயமா வரி கட்டறோம்? எப்படி எல்லாம் அரசாங்கத்தை ஏமாத்த முடியுமோ அப்படியெல்லாம் ஏமாத்துவோம் . வாங்கற போருள் எதுக்கும் பில் வாங்காம கடைக்காரன் ஏமாத்தவும் உறுதுணையா இருப்போம் . இப்படி இருக்கற நாம கருணாநிதி சுயநலவாதி , ஜெயலலிதா சர்வாதிகாரினு வாய்கிழிய பேசுவோம்.

ரோட்ல கிடக்கற ஒரு வாழைப்பழ தோலைக்கூட எடுத்து குப்பைத்தோட்டில போடாத அளவுக்கு சமூக அக்கறை கொண்ட நமக்கு, ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்க்காக (ஒரு நிமிடம், இரண்டு நிமிடத்திற்காக ) நேர்மையை இழக்கும் நமக்காக, தலைவர்கள் என்ன வானத்துல இருந்தா வருவாங்க?

அவுங்க அவுங்க தன்னால முடிஞ்ச அளவுக்கு பிரச்சனையில்லாத அளவுக்கு ஏமாத்தறோம். அவ்வளவுதான்.

படிச்சவன் எல்லாம் சாலைவிதிகளை கடைபிடித்தால், குப்பைகளை சரியான இடத்தில் போட்டால் அதை விரைவில் அனைவரும் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். வீட்ல உக்கார்ந்து கேவலமான டீவி சீரியல் பாக்கற நேரத்துல, அரட்டை அரங்கம், டாப் டென் பாக்கற நேரத்துல ஒரு தெருவுல இருக்கவங்க எல்லாம் சேர்ந்தா அந்தா தெருவையே சுத்தப்படுத்திடலாம்.

அதுமட்டுமில்லாம அரசாங்கம் தான் செய்யனும்னு இல்லாம தெருல இருக்கற பசங்களுக்கோ இல்லை டியூசன் போய் படிக்க வசதியில்லாத பசங்களுக்கோ பாடம் சொல்லி கொடுக்கலாம், தெருவுல செடி நடலாம். இன்னும் எவ்வளவோ பண்ணலாம் . எல்லாரும் ஒரு நாளைக்கு ஒரு ஒரு மணி நேரம் வெட்டி நியாயம் பேசறத நிறுத்திட்டு வேலை செஞ்சா கண்டிப்பா எல்லாத்தையும் மாத்தலாம். அது இல்லாம நமக்காக உழைக்க ஒரு தலைவன் வருவான், அவன் வாழ்க்கையை தியாகம் பண்ணுவானு, வானத்தையே பாத்துட்டு இருந்தா ஒரு மண்ணும் நடக்காது .

நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான் ... மக்கள்னா வேற யாரும் இல்லை . நாமதான் ...

(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான் )

Wednesday, February 4, 2009

தூக்கம் விற்ற காசுகள்..

இருப்பவனுக்கோ வந்துவிட ஆசை ..
வந்தவனுக்கோ சென்றுவிட ஆசை ..
இதோ.. அயல் தேசத்து ஏழைகளின்
கண்ணீர் அழைப்பிதழ் .. !

விசாரிப்புகளோடும் ..
விசா அரிப்புகளோடும்... வருகின்ற
கடிதங்களை நினைத்து .. நினைத்து..
பரிதாபப்படத்தான் முடிகிறது..

நாங்கள் பூசிக்கொள்ளும்
சென்டில் வேண்டுமானால் ..
வாசனைகள் இருக்கலாம்..
ஆனால் ... வாழ்க்கையில் .. ?

தூக்கம் விற்ற காசில்தான்..
துக்கம் அழிக்கின்றோம் ..
ஏக்கம் என்ற நிலையிலேயே ..
இளமை கழிக்கின்றோம் ..

எங்களின் .. நிலாக்கால
நினைவுகளையெல்லாம் ..
ஒரு விமான பயணத்தினூடே
விற்று விட்டு.. .

கனவுகள்
புதைந்துவிடுமெனத் தெரிந்தே ..
கடல் தாண்டி வந்திருக்கிறோம் ..

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு
எழுந்த நாட்கள் கடந்து விட்டன ..
அலாரத்தின் எரிச்சல் கேட்டு
எழும் நாட்கள் கசந்து விட்டன..

பழகிய நாட்கள் ..
பழகிய வீதிகள்..
கல்லூரி நாட்கள் ...
தினமும் ..
ஒரு இரவு நேர கனவுக்குள்..
வந்து .. வந்து ..
காணாமல் போய்விடுகிறது..

நண்பர்களோடு .. ஆற்றில் . .
விறால் பாய்ச்சல்..
மாட்டுவண்டி பயணம்..
நோன்பு நேரத்துக் கஞ்சி ..
பம்பரம் - சீட்டு - கோலி என
சீசன் விளையாட்டுக்கள் . .
ஒவ்வொரு
ஞாயிற்றுக் கிழமையாய் எதிர்பார்த்து
விளையாடி மகிழ்ந்த உள்ளூர்
உலகக்கோப்பை கிரிக்கெட்

இவைகளை
நினைத்துப்பார்க்கும்போதெல்லாம் ..
விசாவும் .. பாஸ்போர்ட்டும் வந்து ..
விழிகளை நனைத்துவிடுகிறது . ..

எவ்வளவு சம்பாதித்தும் .. என்ன ?
நாங்கள் அயல் தேசத்து . .
ஏழைகள் தான். .!

காற்றிலும்.. கடிதத்திலும்..
வருகின்ற சொந்தங்களின் ..
மரணச் செய்திகளிலெல்லாம்..
அரபிக்கடல் மட்டும்தான் ..
ஆறுதல் தருகிறது .. !

ஆம்.. !
இதயம் .. தாண்டி..
பழகியவர்களெல்லாம்..
கடலைத்தாண்டி ..
கண்ணீரிலேயே..
கரைந்துவிடுகிறார்கள் .. !

'இறுதி நாள்' நம்பிக்கையில் தான்..
இதயம் சமாதானப்படுகிறது...

இருப்பையும்.. இழப்பையும்..
கணக்கிட்டுப் பார்த்தால் ..
எஞ்சி நிற்பது .. இழப்பு மட்டும் தான்.. !

பெற்ற குழந்தையின் ..
முதல் ஸ்பரிசம்.. முதல் பேச்சு..
முதல் பார்வை.. முதல் கழிவு..
இவற்றின் பாக்கியத்தை ..
தினாரும் - திர்ஹமும்..
தந்துவிடுமா..?

கிள்ளச்சொல்லி ..
குழந்தை அழும் சப்தத்தை ..
தொலைபேசியில் கேட்கிறோம்.. !

கிள்ளாமலேயே ..
நாங்கள் தொலைவில் அழும் சப்தம்..
யாருக்குக் கேட்குமோ.. ?

ஒவ்வொருமுறை ..
ஊருக்கு வரும்பொழுதும் ..
பெற்ற குழந்தையின் ..
வித்தியாச பார்வை ..
நெருங்கியவர்களின் .. திடீர்மறைவு..

இப்படி ..
புதிய முகங்களின் . .
எதிர் நோக்குதலையும்..
பழைய முகங்களின் ..
மறைதலையும் கண்டு..

மீண்டும்..
அயல் தேசம் செல்லமறுத்து..
அடம் பிடிக்கும்.. மனசிடம்..

தங்கையின் திருமணமும்..
தந்தையின் கடனும்..
பொருளாதாரமும் வந்து ..
சமாதானம் சொல்லி..
அனுப்பி விடுகிறது.. .
மீண்டும்.. . அயல் தேசத்திற்கு.. !

- ரகசிவ் ஞானியார், துபாய்

http://www.orkut.com/Main#CommMsgs.aspx?cmm=70917&tid=5299031200039063266

காணவில்லை!

தேசியக் கொடியில்
திடீரெனக் காணவில்லை அசோகச் சக்கரம்
தேடிச் சென்றால்
ஈழத் தமிழர்களின் கழுத்தின் மீது!
காங்கிரஸ் கொடியில்
ராட்டை தொலைந்து வெகுநாட்களாயிற்று
ரத்தக்கறை படிந்த கை அந்த இடத்தில்!
ராஜீவ் போனாலென்ன
மனைவி கை, மகன் கை, மகள் கை!
மன்மோகன் சிங்குக்கு
அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்குப்
பெருவியப்பு
இந்தியாவில் துடிப்பதன் எதிரொலி இலங்கையில்!
பழைய "மனோகரா" வசனப் புத்தகத்துடன்
உச்ச நீதிமன்றத்தின் பின்னே ஒருவர்
மஞ்சள் துண்டால் வியர்வை துடைத்தபடி!
காற்றுப் புரட்டிய பக்கத்தில்
"புறநானூற்றுப் புகழை மறைக்க வந்த
புழுதிக் காற்றே!"
மானம், வெட்கம், சூடு, சொரணை
மருந்துக்குக்கூடக் காணோமே!
மனைவியர், மக்கள், பேரன், பேத்திகள்,
பதவிகள், சொத்து, சுகம், நீடிக்கும் ஆயுள்;
முத்துக்குமார் செத்தாலென்ன,
பள்ளபட்டி ரவி செத்தாலென்ன,
ஈழத்தமிழனென்ன
ஈரோட்டுத் தமிழன் செத்தாலும்
இறங்கற்பா எழுத முடியாது;
பிடுங்கிச் சென்றுவிட்டாராம் பேனாவை
பிரணாப் முகர்ஜி!

- தெ. சுந்தரமகாலிங்கம்

http://www.inaiyavuli.blogspot.com/